வியாழன், 18 நவம்பர், 2021

திருவள்ளுவர்

திருவள்ளுவர்

இரண்டடி ஆசான்
இருந்தான் அன்றொரு நாள்
ஏழடி சீர் படைத்து மானிடத்தை
ஏற்றம் பெறச் செய்தான்

தாடியுடன் வார்த்தை
வேள்விகளைச் செய்து
மனித மனங்களை
கசக்கிப்பிழிந்த
கொல்லன் அவன்

அறம் பொருள் இன்பம்
என்ற மூன்று இயலையும்
குறையாத சுவையோடு
பந்திவைத்தப் பகுப்பாளன்

ஏடில்லா காலத்திலே
எழுத்தானி கொண்டு
ஓலைச்சுவடியில்
வரிகளை வடித்த
வார்த்தை வித்தகன்…

அரசலையும், புரசலையும்
அரசியலையும், அறிவியலையும்
அன்றே அறிவுக்கு கிட்டச் செய்த
ஆய்வாளன் அவன்…

வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே என
புதுவைக்குயில் புதிய சரித்திரம்
படைத்த சிம்ம சொப்பனமே…

காலங்களைக்கடந்து  நிற்கும்
கருத்து குவியல்களை
கண்ணோடு ஒத்தியெடுக்க- இரு

கண்களும், கரங்களும் போதாதே…

ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு


ஆசிரியர் தின விழா – கவிதைத்தொகுப்பு



அறப்பணியாம் ஆசிரியப்பணியை சீருடனும் சிறப்புடனும் ஆற்றிக்கொண்டிருக்கும் நமது பேராசிரியப் பெருமக்களுக்கு நம் மாணவர்கள் சார்பாக ஆசிரியர் தின விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இந்த கவிதைத் தொகுப்பை சமர்ப்பிக்கிறேன்.

கல்வி ஆசான்களை அடையாளப்படுத்தும்
அற்புதத் திருநாள் இந்த
ஆசிரியர் தின நாள்..

ஆசிரியர்களின் நல் ஆசானாய்த் திகழும்
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்
இந்த ஆசிரியர் தின நாள்..

வந்தனம் செய்வோம் நல்
வந்தனம் செய்வோம்
கல்வி மூலம் வாழ்க்கைக்கு நல்
வழி கர்றுத்தந்த ஆசான்களுக்கு
வந்தனம் செய்வோம்..
நின்ற இடத்திலே நின்று
நித்திய சத்திய புத்திய
போதனைகளைக் கற்பித்து
வெற்றியின் உச்சத்தைத் தொட
வேதனைகளையும், சோதனைகளையும்
துச்சமென மதித்து
சாதனை, சரித்திரம் படைக்க
சூத்திரப் பாடம் கற்றுத்தரும்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
கலைகள் யாவும் கற்றுத்தந்து
கட்டிக்கரும்பு சாறுபிழிந்து
பாடங்களை பாங்கோடு பருகச்செய்யும்
புத்திரர்களான நம் ஆசான்களை
வந்தனம் செய்வோம்..
சிந்திக்க மறந்த மனங்களை
உள்ளன்பு உவகையோடு தட்டியெழுப்பி
கல்வி தானம் தரும் நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..
ஐந்தில் வளையாததை அகவை
முப்பதிலும் வளைத்து நெளித்து
தங்கத்துகள்களால் புடமிட்டு
மிளிரச்செய்யும் மந்திரம் தெரிந்த நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

கல்வி பிறருக்கு கொடுப்பதால்
என்றுமே குறைவுபடாது என்ற
ஒளவைப் பாட்டியின் ஓதலை உணர்ந்து
உவப்புடனே உள்ளங்களைத் தொட்ட நம்
ஆசான்களை வந்தனம் செய்வோம்..

இக்கவிதைத் தொகுப்பு வெறும்
வார்த்தை ஜாலங்களுக்காக எழுதவில்லை
மாணவர்களாகிய எங்களுக்கு நல்வழிகாட்டும்
உங்களை இந்த ஆசிரியர் தின நாளில்
புகழ்வது தகும் என்பதாலே..