வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கற்றலின் அவசியம்

                    கற்றலின்  அவசியம்
முன்னுரை:
பெண்களின்  முன்னேற்றம்

                       
                    கல்வியே நம்மவரின் உயிர்த்துடிப்பு. “கல்வி” என்ற உயிர் இவ்வுலகில் இல்லையென்றால், நாம் அனைவருமே, உயிர் இல்லா திடப்பொருளாகிவிடுவோம். கல்வியால் நம் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. கல்வி என்ற கலைச் செல்வம், நம் அனைவரையும், வாழ்க்கை என்ற மேடையில் நடிக்க வைக்கும் ஆசான். இப்படிப்பட்ட கல்வி கற்றலின் அவசியத்தை இக்கட்டுரையில்  விரிவாகக் காண்போம்
.
கல்வி:
                        “கல்லுதல்” என்பதற்கு தோண்டுதல்”,  வெளிக்கொணர்தல்” என்பது பொருள். அறியாமை என்ற அகக்களையை வேரறுத்து, அறிவு என்ற ஒளிச்சுடரை அறுவடை செய்வதே கல்வியாகும். உள்ளத்தை அறிவால் நிரப்பிட, ஒழுக்கத்தை வளர்த்திட, மனிதன் மனிதனாக வாழ்ந்திட நூல்களைக் கற்பதே கல்வியாகும்.
கற்றலின் சிறப்பு:
                        “கற்கை நன்றே கற்கை நன்றே
                         பிச்சை புகினும் கற்கை நன்றே”
-என்று கற்றலின் சிறப்புப்பற்றி அதிவீரராம பாண்டியர் உணர்த்தியுள்ளார். ஒருவன் கல்லாமல் இருப்பதை விட, பிறவாமல் இருப்பதே மேல்” என்கிறார் பிளாட்டோ. ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு, அந்நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால், கற்றவனுக்கோ, சென்ற இடமெல்லாம் சிறப்பு. “அறிவுடைய ஒருவனை அரசனும் மதிப்பான்” என்கிறது “வெற்றி வேற்கை”
                                    கல்வி” அழியாது. வெள்ளத்தால் போகாது; வெந்தணலிலும் வேகாது; கள்வராலும் கவரமுடியாது. எவ்வளவு கொடுத்தாலும் நிறையுமே தவிர, ஒருக்காலும் குறையாது. இத்தகைய கல்விச்செல்வத்தை ஒவ்வொரு மனிதனும் கண்கண்ட தெய்வமாகக் கருத வேண்டும்.
கல்வியின் பயன்:
                        கல்வி கற்றலின் மூலம் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப்பொருள்களைப் பெறமுடியும். நம்முள் புதைந்து கிடக்கும் அறியாமை இருளை அகற்றி, பகுத்தறிவைத் தருவது கல்வியே. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது கல்வியே.
                        கற்றவரே கண்ணுடையவர், கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவர். கற்றவரே மனிதர், கல்லாதவர் விலங்குகளுக்கும் மரத்திற்கும் ஒப்பானவர்.
கல்வி கற்றலின் பெருமை:
“ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழியானால், கல்வி இல்லாத மனிதன், அதனினும் குறைவானவன் என்பதை புது மொழியாகக் கொள்ளலாம். “எண்ணும், எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பது ஆன்றோர் வாக்கு. கல்வி கற்றவரை, அவருடைய வாழ்க்கை முறையில் இருந்தே அறிந்து கொள்ளலாம். எண் சாண் உடம்பினை உடைய மனிதனுக்கு தலையே முதன்மையானது. அத்தலையிலும் கண்ணே முதன்மையானது. அதனால்தான் கல்வி கற்றவரை கண்ணுடையார் என பெருமக்கள் பலர் கூறுகின்றனர்.
கற்றலின் அவசியம்:
                        கல்வி அறிவு இல்லாத எந்தவொரு மனிதனும், இவ்வுலகை வாழ்வியல் யதார்த்தங்களைக்கூட எளிதில் அறியமுடியாது. இன்றைய கணினி உலகில் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புக்கள் முதல், கல்வி அறிவு கடுகளவும் இல்லையெனில், அவற்றையும் அறிய முடியாது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற வாக்கின்படி நாம் அனைவரும் கல்வியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
முடிவுரை:
                        மக்களனைவரும் கல்வி பெற்றால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும். நாட்டு மக்கள் அறியாமை அகன்று, எல்லாச் செல்வங்களும் உடையவராகவும் விளங்குவர். மக்களாட்சி மாண்பு பெரும். இல்லை என்ற சொல் இல்லாமல் போகும். எனவே, கல்வி என்ற விலைமதிப்பில்லா செல்வத்தை அனைவரும் பெற நாம் உறுதுனையாய் இருப்போம்.
                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக